
ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில்… மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது. இதற்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்.
பார்வையாளர்கள் இந்தத் தொடரை பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன் 2 தொடரின் கதை களத்திற்குள் பயணித்து விடுவீர். ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து 43 நாட்கள் மதுரை- காரைக்குடி- ராமநாதபுரம்- திருச்சி- ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த வதந்தி சீசன் 2 நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர். இதற்காகவும் அனைவருக்கும் நன்றி.
வதந்தி சீசன் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக எஸ் ஜே சூர்யாவிற்கு நன்றி. சீசன் 1ல் எஸ் ஜே சூர்யா- அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
வதந்தி சீசன் 2 விற்காக சசிகுமாரை அணுகி கதை சொல்லும் போது நான் முழு கதையையும் எழுதி நிறைவு செய்யவில்லை. அவரை மதுரையில் சந்தித்து கதையை சொன்னதும் அவர் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு முழு திரைக்கதையை எழுதி நிறைவு செய்துவிட்டு வாருங்கள் என்றார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் அவருக்காக மீண்டும் ஒரு முறை மூஸா ராசா கதாபாத்திரத்தை சிறப்பாக எழுத தொடங்கினேன். இதுவே வதந்தி சீசன் 1க்கும் சீசன் இரண்டுக்குமான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது.
இசையமைப்பாளர் சிமோனை பற்றி குறிப்பிட வேண்டும். வதந்தி சீசன் 1க்கான இசை வேறு. சீசன் 2 விற்கான இசை வேறு. அவரும் ஒரு வகையில் கதை சொல்லி தான். நான் கண்ணை மூடிக்கொண்டு இந்த தொடரின் எபிசோட்டை பார்க்கும்போது… இசையே கதையை சொல்லும். அந்த அளவிற்கு அவர் கலை நுட்பம் கொண்டவர். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில், ”
வதந்தி 2 கதையை இயக்குநர் மதுரையில் என்னை சந்தித்து சொன்னார். டைட்டிலை கேட்டவுடன் நான் தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று நினைத்திருந்தேன். மதுரை என்பதால் மணி- குட்டி புலி- என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். யாரும் என்னை போலீசாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இயக்குநரிடம் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டேன். நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் மூஸி ராசா கேரக்டரில் நடிக்கிறனா? என்று கேட்டேன். அவர் தான் நீங்கள் போலீசாக மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்றார். மதுரை பின்னணியில் என்னை ரவுடியாக இல்லாமல் போலீசாக நினைத்து கதையை எழுதியதால் அந்த கதையை முழுவதுமாக கேட்டேன். இந்தக் கேரக்டர் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால்… அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸின் கடும் உழைப்புதான் காரணம்.
போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார். அந்தக் கதாபாத்திரம்- மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் தான் வதந்தி சீசன் 2 வின் கதை நகரும்.
இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தான் இருக்கும். ஆனால் இந்த தொடரில் பாவம் ஹீரோ ..! போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து, இவனை விடுவித்து விட வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும்.


அதைவிட வதந்தி சீசன் 1 எஸ் ஜே சூர்யா நடித்து பெரிய ஹிட்டான தொடர். அதற்கும் இந்தத் தொடருக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் இந்தத் தொடரும் புதுமையாக இருக்கும். இந்த இணைய தொடர் வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன்.
இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போது ஏதேனும் ஒரு இடத்தில் லேசாக சிரித்தாலும்… மூஸா ராசா கேரக்டர் சிரிக்காது என இயக்குநர் சொல்லிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாள் வரை சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு அது பழகிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இயக்குநர் என்ன சொன்னாரோ..! அதை மட்டும் தான் செய்தேன்” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ”
ட்ரீம் ப்ரொடியூசர் மற்றும் ட்ரீம் டைரக்டர் உடன் இருக்கும்போது எங்களுக்கெல்லாம் நடிப்பு தானாகவே வரும். எல்லாமே பேப்பரில் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ…! அதை செய்தால் மட்டும் போதும்.
புஷ்கர்- காயத்ரி அவர்களுடைய தயாரிப்பு என்றால்.. அதில் பணியாற்றும் அனைவருக்கும் சந்தோஷம் தான். அனைவரையும் அவர்கள் அரவணைத்து அக்கறை காட்டி அன்பு செலுத்துவார்கள்.
என்னைப் பொறுத்தவரை இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ரைட்டர். இவருடைய எழுத்தையும், ஸ்கிரிப்டையும் வாசிக்க வாசிக்க குஷியாகி விடுவேன். ஆனால் இந்த தொடரின் எட்டாவது எபிசோடின் ஸ்கிரிப்ட்டை மட்டும் அனுப்பவில்லை. நான் ஆர்வமுடன் காத்திருந்தும்… நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் தான் அதற்கான ஸ்க்ரிப்டை அனுப்புவார்.
வதந்தி சீசன் 1 ஐ விட இந்த சீசன் 2 விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை இந்தத் தொடர் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகர் யஷ்வந்த் பேசுகையில்,
”என்னைப் போன்ற புது முகங்களை கூட தயாரிப்பாளர்கள் புஷ்கர் -காயத்ரி மதிப்பு அளித்து பல விசயங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர். அவர்களுடைய குழுவில் உள்ள அனைவரும் எனக்கு சிறந்த முறையில் வழிகாட்டினர். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ஆண்ட்ரூஸ் வதந்தி மூலம் எனக்கு வாய்ப்பு மட்டும் தரவில்லை…! வாழ்க்கையையே கொடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் பெரிது. ஒரு புது முகத்திற்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரமும், அதற்கான சுதந்திரமும் கொடுப்பார்களா..! என எனக்குத் தெரியவில்லை. கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும் நன்றி” என்றார்.
நடிகை அபர்ணா தாஸ் பேசுகையில்,
” ‘டாடா’ படத்திற்குப் பிறகு தமிழில் நல்லதொரு கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன். இந்தத் தருணத்தில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுவரை ஏற்று நடித்ததில் இந்த ‘சுமையா’ கதாபாத்திரம்தான் சற்று வித்தியாசமான சுவாரசியமான இனிமையான கதாபாத்திரம். படப்பிடிப்பு அனுபவம் அனைத்தும் மறக்க இயலாது.
‘கண்கள் இரண்டால்..’ என்ற பாட்டில் சசிகுமாரின் தலையாட்டலுக்கு எங்கள் கேரளா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருத்தி. அப்போதிருந்தே சசிக்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு இதில் நிறைவேறி இருக்கிறது. இதற்காக அவருக்கும் நன்றி. ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று இந்த வதந்தி சீசன் 2 வெளியாகிறது. முதல் சீசனை விட இந்த இரண்டாவது சீசனுக்கு நீங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
நடிகை அனகா மருதோரா பேசுகையில், ”
இந்தத் தொடரில் லீலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்த கதாபாத்திரத்தை பற்றி விவரித்து என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அதன் பிறகு தான் இந்த தொடரில் என்னுடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். தயாரிப்பாளர்கள் புஷ்கர் -காயத்ரி அவர்களுடன் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் அலுவலகம் எங்களுடைய இரண்டாவது குடும்பம் போல் இருக்கும்.
‘கருடன்’ படத்திற்குப் பிறகு நான் சசிகுமார் சார் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது” என்றார்.
இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில்,
” வதந்தி சீசன் 1 வதந்தி சீசன் 2 இதற்கு இசையமைக்கும் போது என்னுடைய பார்வையில் அதன் கீழே இருக்கும் ஒரு டேக்லைன் தான் கவனத்தில் இருந்தது. சீசன் 1ல் ஃபேபிள் ஆப் வெலோனி என இருக்கும். சீசன் 2வில் மிஸ்டரி ஆஃப் மணி என இருக்கும் இதைத்தான் நான் வதந்தியாக பார்த்தேன்.
சீசன் 1 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதற்கான இசை வேறானதாக இருக்கும். சீசன் 2 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதனால் இதற்கான இசையும் வேறானதாகவே இருக்கும்.
வதந்தி சீசன் 1- சீசன் 2 என இரண்டிலும் மனிதர்களுக்கான எமோஷன் கூடுதலாக இருக்கும். அதற்கான இசையைத்தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். இது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
வதந்தி சீசன் 1ல் பாடல்கள் கிடையாது. ஆனால் வதந்தி சீசன் 2 வில் இரண்டு பாடல்கள் இருக்கிறது. இதுவே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும். இதன் மூலம் மணி ரோமியோ என்ற பாடலாசிரியரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ‘வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் தமிழில் வெளியாகிறது. அத்துடன் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் , ஆங்கிலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டிலுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.