
நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய⁸ அரங்கேற்ற விழா – திரைப்பிரபலங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து !!
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனர் மற்றும் இயக்குநர் குரு துளசி அவர்களின் மாணவியான P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.
J. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான P.U.சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியிடம் பரதநாட்டியம் பயின்று, தனது நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அரங்கேற்ற நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்தார்.
இந்நிகழ்விற்கு தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது பெற்ற நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பரதநாட்டிய உலகின் முன்னணி கலைஞரும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான சாந்தா தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுப்ரஜாவிற்கு ஆசி வழங்கினார்.
இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆபவாணன், காஜா மொய்தீன், வரதராஜன், நடிகர் இளவரசு, ஒளிப்பதிவாளர்கள் ரத்னவேலு, செல்வகுமார், எழுத்தாளர் மற்றும் நடிகர் கவிதா பாரதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அரங்கேற்ற கலைஞருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில்வேல் மற்றும் சுங்கத்துறை இணை ஆணையர் டாக்டர் சி. சரண்யா, IRS ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கலைஞர்களை பாராட்டினர்.
குரு துளசியின் நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புஷ்பாஞ்சலி முதல் மங்களம் வரை பரதநாட்டியத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக அரங்கேறின. கலைநயமும், அபிநயமும், துல்லியமான அசைவுகளும் நிறைந்த சுப்ரஜாவின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இசைக்குழுவாக தென்காசி சமய்குமார் (வாய்ப்பாட்டு), எஸ்.வி. ரமணன் (மிருதங்கம்), ஆர்.டி. ஜெகதீசன் (வயலின்), நிமல் வர்ஷன் (புல்லாங்குழல்) ஆகியோர் இசை வழங்கினர். ஒப்பனையை கீதா மணிமொழி மேற்கொண்டார்.
விழாவில் திரையுலக மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள், பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு P.U. சுப்ரஜாவின் கலைப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பாரம்பரிய கலை மரபை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இந்த பரதநாட்டிய அரங்கேற்ற விழா, கலைநயம், ஆன்மிகம் மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமையை எடுத்துரைக்கும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.